தொலைகாட்சியில் வி.வி.டி தேங்காய் எண்ணைக்காரன் ஒரு பொது நல விளம்பரம் போடுகிறான். தேங்காய் எண்ணையை கையில் தேய்த்துக் கொண்டு போனால் பாக்டீரியா, வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கலாமாம்.
ஊரடங்கு ஆரம்பித்த இரண்டு நாளில் ஒரு தொலைக்காட்சி செய்தி. மாஸ்க் கிடைக்காத பனை ஏறும் தொழிலாளிகள், பனை ஓலையில் மாஸ்க் செய்து மாட்டிக் கொண்டு பனை மரம் ஏறும் வீடியோவுடன் வந்த்து. அதை பத்து ரூபாய்க்கு விற்கப் போவதாகவும் சொன்னார்கள்.
என்ன செய்வது? சில சமயம் பாமர மக்கள், இப்படித்தான் சிந்திப்பார்கள். (அதற்கு அறிவுரை சொல்லாமல்) அதை நூதன கண்டுபிடிப்பு என்று செய்தியாக வேறு போடும் சன் டிவி ஊடக மேதைகள்.
ஊரடங்கு போட்டு ஒரு மாதமாகிறது. இன்னும் “மாஸ்க் அணிந்து திருமணம் செய்து கொண்டனர்” என்று போட்டோவுடன் அல்பத்தனமாக செய்தி தரும் ஊடகங்கள். போதாக்குறைக்கு நம் செய்தித்தாள்களில், ஊடகங்களில், தொலைக்காட்சிகளில் படித்தவர்கள் தான் வேலை பார்க்கிறார்களா அல்லது முட்டாள்கள் மட்டுமே வேலை பார்க்கிறார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. கொரோனா நிவாரணமாக குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் என்று செய்தி வருகிறது. அட முட்டாள்களா, கொரோனா வந்தவனுக்கு காசு கொடுத்தால் தான் அது கரோனா நிவாரணம். ஊரடங்கு நிவாரணம் என்று போட்டாலாவது பரவாயில்லை.
பல “பிரபல” டாக்டர்கள் வேறு, அதைச் செய்தால் வைரஸ் பரவாது, இதைச் செய்தால் கரோனா வராது என்று வாய்க்கு வந்ததையெல்லாம் அடித்து விடுகிறார்கள். தினமலரில் ஒரு டாக்டர் சொல்லியிருந்தார் மன அழுத்தம் இல்லாமல் இருந்தால், வைரஸெல்லாம் தாக்காதாம். அந்த டாக்டருக்கு மன நல மருத்துவம் தான் செய்ய வேண்டும்.
உண்மையில் கரோனாவை எதிர் கொள்வது, அதற்கு மருத்துவம் பார்ப்பது போன்றவையெல்லாம் உலகம் முழுவதும் சோதனை அளவிலேயே இருக்கின்றன. டிரையல் அண்ட் எர்ர் மெத்தட் தான் எல்லா இடத்திலும்.. டிரையல் சக்சஸ் ஆனால் பிழைக்க வாய்ப்பு, எர்ர் எனில் சாவு, இது தான் உண்மை நிலை. மற்றபடி குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்து வர்ணித்த கதைதான் கரோனா பற்றி வரும் செய்திகளில் 99 விழுக்காடு.
செய்தித்தாள்கள் மெடிக்கல் எமர்ஜென்சியில் அவ்வளவு அத்தியாவசியமா என்ன? ஒரு பேப்பர் போடும் பையனுக்கு வியாதி இருந்து விட்டால் ஊரெல்லாம் கொடுத்து விடுவானே. பேப்பர் போடுபவர்கள் கொரோனா வீர்ர்களாம் (தினமலர்). தன் தொழில் கெட்டு விடுமோ என்ற பயம்.
ரூபாய் நோட்டு மூலம் பரவாது என்றார்கள். தொட்டால் பரவும் ஒட்டுவாரொட்டி வியாதி ரூபாய் நோட்டு மூலம் பரவாமல் எப்படி இருக்க முடியும் – ஒருவரும் கேள்வி கேட்கவில்லை. இன்று லாரி டிரைவர்சீட்டு விளையாடியதால் பலருக்கு வியாதி பரவியது என்கிறார்கள். அந்த லாரி டிரைவர் சீட்டு விளையாடியதன் மூலம் பரப்பி இருந்தால், அவன் காசு கொடுத்து பொருள் வாங்கிய கடைக்காரர்களுக்கு பரவி இருக்காதா? என்னய்யா உங்க லாஜிக்.
இது பரவாமல் தடுக்க சில எளிய வழிமுறைகள், என் சிற்ற்றிவுக்கு எட்டியவரை. ஒருவரை ஒருவர் தொடாமல், அருகில் நெருங்காமல் இருத்தல், ஒருவர் தொட்ட்தை இன்னொருவர் தொடாதிருத்தல். தொட வேண்டிய அவசியம் இருந்தாலும், அப்பொருளை கூடுமானவரை சுத்தம் செய்து பின் தொடுதல், தும்மல் இருமல் காய்ச்சல் இருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லாதிருத்தல், உரிய சிகிச்சை எடுத்தல், தினசரி டைரிக்குறிப்பு எழுதுதல் போன்ற சிம்பிளான வழிகள் தான்.
சந்தடி சாக்கில் டெட்டால், லைசால் கார்ரகள் வீடெல்லாம் ஸ்பிரே அடித்து கிளீன் செய்வது போல பொது நல விளம்பரம் செய்து மக்களைக் குழப்புகிறார்கள். வீடுகளில் அடிக்கடி பயன்படுத்தும் கைப்பிடி, டைனிங் டேபிளைத் துடைக்கச் சொல்கிறார்கள். இதிலிருந்து கரோனா உருவாகிறதா என்ன? ஒருத்தருக்கு வந்தால் அறிகுறி வெளியில் தெரியும் முன்னரே சாதாரண சளியே பரவி விடுகிறது. ஒட்டி ஒரே வீட்டில் இருப்பவருக்கு வராமல் கரோனா போகுமா? கைப்பிடிகளைத் துடைத்து டைனிங் டேபிளைத் துடைத்து விட்டால் கணவருக்கு வந்த கரோனா மனைவிக்கு வராமல் போகுமா?
முட்டாள்தனமாக கருத்து சொல்லாமல், செய்திகள் போடாமல், ஏமாற்றி கெமிக்கலை விற்கும் விளம்பரம் போடாமல் சிவனே என்று இருந்தால் பாமர மக்கள் கூட தானாக விழிப்புணர்வு பெற்று விடுவார்கள்.